கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல். நாற்பத்தொரு பாடல்களைக்
கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ்
நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது
இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.
நாற்பது என்னும் எண் தொகையால்
குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே
அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும்
முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து
உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும்
சொற்கள் அமைந்துள்ளன. இன்னா நாற்பதில் கடவுள்
வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன
இன்னாநாற்பது பாடிய கபிலர் சங்க காலக் கபிலருக்கு
இரண்டொரு நூற்றாண்டு பிற்பட்டவர். பாடலை இவர் ‘கவி’ எனக் குறிப்பிடுவது ஒன்றே இவரது காலம் பிற்பட்டது
என்பதைக் காட்டப் போதுமானது.